Friday, June 27, 2008

த்ரிஷாவிடமிருந்து நயனுக்குத் தாவிய விஜய்!

நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8. அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...

கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.

விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.

அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.

அழகிய தமிழ் மகனில் ஸ்ரேயா-நமீதாவுடன் விஜய் நடித்தது எடுபடவில்லை. மீண்டும் தனக்கு ராசியான நடிகை எனப்பட்ட த்ரிஷாவுடன் குருவியில் இணைந்தார். ஆரம்பத்தில் இப் படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என்பதில் பெரிய மியூசிக்கல் சேர் போட்டியே நடந்தது.

முதலில் ஸ்ரேயா, அடுத்து வித்யா பாலன் என பேசப்பட்டு இறுதியில் நயன்தாரா என முடிவானது. ஆனால் என்ன மாயமோ அடுத்த சில தினங்களிலேயே அந்த இடத்தைப் பிடித்துவிட்டார் த்ரிஷா.

ஆனால் த்ரிஷாவின் நட்பு அலுத்துவிட்டதோ என்னமோ... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிராண்ட் அம்பாஸிடராகத் தன்னுடன் நயன்தாராவை நியமிக்குமாறு விஜய்தான் சிபாரிசு செய்தாராம்.

இடையில் ஏவிஎம் குருநாத் செய்த குழப்பம், அதிலிருந்து நயனை பாதியிலேயே கழட்டிவிட வைத்தது. அந்த இடத்தைப் பிடிக்க த்ரிஷா பலமாக முயற்சி செய்தும், விஜய் விரும்பாததால் அந்த இடம் காலியாகவே விடப்பட்டது நினைவிருக்கலாம்.

இப்போது வில்லு படத்தில் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இந்தப் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு ஜோடி நயன்தாராதான் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம் விஜய்.

விஜய்யின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்ட நயன்தாராவும், அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் விஜய் தன் ரசிகர் மன்றத்துக்காக தனிக்கொடி அறிமுகப்படுத்தியபோது கொள்கைப் பரப்புச் செயலாளர் மாதிரி கூடவே நின்று போஸ் கொடுத்து விஜய் ரசிகர்களின் அன்பை அள்ளிக் கொண்டார் நயன்தாரா.

விஜய்யுடன் நெருக்கமாக இருந்த த்ரிஷாவோ, அவரது விருப்ப நாயகி ஆசினோ இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

என்னமோ நடக்குது...

No comments: